
ஷாமளாராணியின் வெற்றித் தருணம்
Advertisement
முதல் சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று நாட்டைப் பெருமைப்படச் செய்தது, மறக்க முடியாத ஓர் அனுபவம்!
வியட்னாம் சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தேசிய கராத்தே வீராங்கணை ஷாமளாராணி Chandran, உணர்ச்சிப் பூர்வமான தனது வெற்றி தருணம் குறித்து ராகா செய்தியிடம்அவ்வாறு வர்ணித்தார்.
Negaraku தேசிய கீதத்துடன் வெற்றியாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டதும், நாட்டுக்குப் பெருமை சேர்த்த நொடி தாம் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றதாகக் கூறினார் ஷாமளாராணி.
இந்தோனேசியா, தாய்லாந்து என பலம் வாய்ந்த விளையாட்டாளர்களுடன் மோதியது நிச்சயம் சவால் மிக்க பயணம் தான்; என்றாலும் இது ஒரு நல்ல அனுபவம் என அவர் சொன்னார்.
முதல் முயற்சியிலேயே வெற்றி என்றாலும், தம்முடன் மோதிய விளையாட்டாளர்கள் கடும் சவாலைக் கொடுத்ததை அவர் மறுக்கவில்லை.

"முதல் சுற்றிலேயேஇந்தோனேசியாவைச் சந்தித்தேன். முந்தைய போட்டியொன்றில் இந்தோனேசியாவுடன் குறைந்த புள்ளி வித்தியாசத்துடன் வெற்றிப் பெற்றேன். ஆனால் இம்முறை அது நிகழக் கூடாது, எதிரணி வீராங்கணைக்குவாய்ப்பை வழங்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்" என்றார் அவர்.
அதே உறுதியுடன் முதல் சுற்றிலேயே 9-1 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தமக்கு மிகப் பெரிய உந்துதலையும் மனவலிமையையும் கொடுத்ததாக ஷாமளாராணி தெரிவித்தார்.
இந்த வேகம் ஓயாது; ஒரு வார ஓய்வுக்குப் பிறகு தமது பயிற்சி தொடரும் என்றாரவர்.
அடுத்தடுத்து பல போட்டிகளுக்குத் தாம் இலக்கு வைத்திருப்பதாகவும் சொன்னார்.
24 வயதுடைய ஷாமளாராணி,Hanoi-யில், மகளிருக்கான 50KG தனிநபர் குமித்தே பிரிவில் தங்கம் வென்றார்.